Wednesday 12 September 2012

பிரமாண்டமாக உருவாக்கப்படும் புதிய டைட்டானிக்!


டைட்டானிக் கப்பலை மனித சமுதாயம் என்றும் மறந்து விடாது.
புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலின் வடிவமைப்புடன் நவீன வசதிகள் அடங்கிய புதிய டைட்டானிக் கப்பல் ஒன்றை உருவாக்க ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில்
ஒருவரான கிளைவ் பாமர், அதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாக பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இவ்வகையான கப்பலை உருவாக்குமாறு சீன அரசுக்கு சொந்தமான கப்பல் தயாரிப்பு நிறுவனத்திடம் தான் கோரிக்கை விடுத்திருப்பதாக ஊடகங்களிடம் கிளைவ் பாமர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பலை உருவாக்கும் பணி அடுத்த ஆண்டு இறுதிப் பகுதியில் ஆரம்பிக்கும் என்றும் 2016ஆம் ஆண்டு இக்கப்பல் உருவாக்கப்பட்டு கடல் பயணங்களுக்குத் தயாராகிவிடும் என்றும் அவர் கூறினார்.
வடிவமைப்பு, கப்பலின் அளவுகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில், இது கடந்த நூற்றாண்டின் டைட்டானிக் கப்பலை ஒத்ததாகவே உருவாக்கப்படும் ஆனால் நவீன தொழில்நுட்பங்கள் இதில் சேர்க்கப்பட்டிருக்கும் என்பதே தனது திட்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவைச் சேர்ந்த சி.எஸ்.சி. ஜின்லிங் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் இக்கப்பலை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் தான் கையொப்பமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்திலேயே ( ஏப்ரல் 15, 1912) பனிப்பாறையில் மோதி மூழ்கிய ஒரு கப்பல். இக்கப்பல் மூழ்கியதன் நூற்றாண்டு நினைவு தினம் கடந்த ஏப்ரல்-15 ம் தேதி அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment